அன்பென்ற சொல்லை நினைத்தாலே உன்நினைவின்
இன்பத்தில் ஊறும் மனது.
உந்தன் நினைவே இரவில் துணை நிற்கும்
சிந்தனையால் சேரும் சுகம்.
உயிரின் முகவரியே! உன்விழிகள் என்னைக்
கயிறாகிக் கட்டியதேன் சொல்.
உந்தன் முகம்பார்த்தே காலை விடிகிறதே
மந்திரமாய் வந்தாய் முளைத்து.
காதலெனும் நோய்க்கு மருந்தாய்நீ வந்தால்தான்
மாதேநான் வாழ்வேன் இனி.
வாழ்ந்தாலும் உன்னோடு செத்தாலும் உன்னோடு
தாழ்ந்தாலும் உன்னோடு தான்.
உன்னைத் தவிர கதியெனக் கில்லையடி
மின்னல்போல் வேகமாய் வா.
நானுனைப் பார்த்த நொடிதனிலே உள்ளத்தில்
தேனூற நின்றேன் திகைத்து.
உனக்கென்ன வேண்டும் உடனே பதில்சொல்!
மனக்கவலை தீர்ப்பேன் விரைந்து.
உயிரைக் கொடுப்பேன் உனக்காக வாழ்வேன்
துயிலாதே நீயின்றி கண்.
அன்பேயென் ஆருயிரே ஆழ்கடல் நித்திலமே
முன்பனியாய் வாநீ குளிர்ந்து.
நீதந்த வாழ்வைத்தான் நானிங்கு
வாழ்கின்றேன்
ஆதலினால் காதல்செய் நீ.
உன்னால் இசைகற்றேன் உன்னால் உயிர்பெற்றேன்
உன்னால்தான் நானானேன் நான்.
நீயின்றி வாழும் விதிதான் எனக்கென்றால்
தீயினில் வீழ்வேன்நான் இன்று.
மலராய் மலர்ந்தாய்நீ என்வாழ்வில் பூத்து
குலவிளக் கானாய் ஒளிர்ந்து.
மல்லிகை தாமரை முல்லை மலர் தெரியும்
மெல்லநீ புன்னகைத் தால்.
தூக்கத்தில் கொஞ்சம் உளறினால் கூடயென்
நாக்கிலே உன்பெயர் தான்.
இனிநான் உயிர்வாழ ஓர்வழியுன் கையில்
கனியே குறைதீர்க்க வா.
உணவை மறந்தாலும் உன்னை மறவேன்
பிணமாவேன் நீசெத்தால் நான்.
உறவுகள் பொய்க்கும் உயிர்நட்பும் சாகும்
இறக்காதே காதல் முடிந்து.
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவனாய்
வேதனையில் வெந்தேன்நான் இன்று.
கண்ணேநாம் காண்கின்ற கனவுகள் ஒன்றுதான்
எண்ணத்தால் ஒன்றானோம் நாம்.
நீபோகும் பாதையில் நான்போக வந்தேனே
வாபோதும் இந்தப் பிரிவு.
தெய்வமே தந்த வரமாய்நீ வந்ததினால்
எய்தானே மன்மதன் அம்பு.
பொல்லாத காதலிலே வீழ்ந்ததினால் நெஞ்செல்லாம்
வெல்லமாயத் தித்தித்தாய் நின்று.
நேரில் பழகாமல் காதலிக்கும் நம்மைப்போல்
பாரினிலே ஏது நிகர்.
ஈருடல் ஓருயிராய் நாம்வாழும் வாழ்க்கைக்குப்
பாருக்குள் உண்டோ நிகர்.
மார்கழியில் வாட்டும் குளிருக்குப் போர்வைநீ
வேர்த்தால்நீ வீசும்பூங் காற்று.
மின்னும் பொருளெல்லாம் பொன்னல்ல என்பதுபொய்
என்னவளே தங்கம் எனக்கு.
வாழ்வில்நீ வந்த பிறகுதான் காதலெனும்
ஆழ்கடலில் மூழ்கினேன் நான்.
இருபத்து நான்குமணி நேரமும் உந்தன்
உருவமே நெஞ்சின் ஒளி.