எந்ததிசை பார்த்தாலும் உன்முகமே தெரியுதடா
எந்தன்வடி வேலவனே சண்முகா!
கந்தனது நாமங்கள் கண்களிலே நிறையுதடா
கார்த்திகையர் புகழ்மைந்தா சண்முகா!
சிந்தனையில் உன்வேலே அறிவாக விளங்குதடா
சக்திவுமை பாலகனே சண்முகா!
சுந்தரனே உன்தமிழ்தான் கவியாக மாறுதடா
சொன்னதெலாம் சரிதானா சண்முகா!
வினையெல்லாம் தீர்த்துவிடும் உன்னபய முத்திரைதான்
வெற்றிவடி வேலவனே சண்முகா!
தினையோடு தேனாக என்நாவில் இனிக்கின்றாய்
தமிழ்போலத் தித்தித்தாய் சண்முகா!
எனைவாட்டும் துயரேல்லாம் வேலாலே அழிக்கின்ற
எதிர்வேலா என்னருமை சண்முகா!
மனைதோறும் குடிகொண்டு மானிடரை கரை சேர்க்கும்
மணிகண்ட சோதரனே சண்முகா!
கண்களிலே ஒளியானாய் உடம்பினிலே உயிரானாய்
கண்டதெலாம் நீயானாய் சண்முகா!
எண்களிலே முதலாகி எழுத்தினிலே அகரமென
எனையாளும் ஆண்டவனே சண்முகா!
பண்களிலே சொல்லானாய் பாட்டினிலே சுரமானாய்
பச்சைமயில் வாகனனே சண்முகா!
உண்ணுகையில் உணவானாய் அருந்துகையில் நீரானாய்
உள்ளிருந்து மூச்சானாய் சண்முகா!
குறையென்ன என்றாலும் உனைக்கண்டு முறையிட்டால்
குளிர்ந்துதவி செய்பவனே சண்முகா!
சிறைவாசி போலிங்கு நான்வாழ்தல் அறியாயோ!
சொல்பதிலை சுந்தரனே சண்முகா!
மறைநான்கின் பொருளாகி புத்தியிலே விளங்குகின்ற
மயிலோனே மால்மருகா சண்முகா!
பிறைசூடும் பசுபதியின் புத்திரனே என்துன்பம்
போவதற்கு கதிநீயே சண்முகா!
ஆறுபடை வீடுகளை ஆள்கின்ற மன்னவனே
ஆறுதலாய் வந்தவனே சண்முகா!
கூறுமடி யார்கள்வினை தீர்க்கின்ற தென்னவனே
குன்றெல்லாம் நிறைந்தவனே சண்முகா!
நீறுதனைப் பூசியுனைப் பெயர்சொல்லித் தொழுவோரை
நித்தியமாய்க் காக்கின்ற சண்முகா!
மாறுகின்ற இவ்வுலகில் மாறாத தத்துவமே
மனக்கவலை நீதீர்ப்பாய் சண்முகா!
வள்ளியினை மணம்செய்ய விளையாடல் புரிந்தவனே
வேல்கொண்டு பகைநீக்கும் சண்முகா!
வெள்ளிமலை எனும்ஊரில் மலைமேலே நின்றருளை
வெள்ளமெனப் பாய்ச்சுகின்ற சண்முகா!
உள்ளதெலாம் நீயாகத் தெரிகின்ற மாயத்தை
உளமாரத் தந்தவனே சண்முகா!
அள்ளியுனைக் கைகளிலே எத்தனைபேர் எடுத்தாலும்
அணுவளவும் குறையாத சண்முகா!
திருச்செந்தூர் கடல்காற்று சாமரமாய் வீசிடவே
திருக்கோவில் கொண்டதிரு சண்முகா!
அருட்கடலே உன்னாழம் பூமியிலே யாரறிவார்
அணையாத உயிர்விளக்கே சண்முகா!
முருகென்ற வார்த்தைக்குன் அழகென்று பொருள்தந்த
முத்தமிழின் காவலனே சண்முகா!
இருள்சூழ்ந்த என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறேன்
இக்கணமே குறைதீர்ப்பாய் சண்முகா!
வரம் வேண்டி யார்வந்துன் வாசலிலே நின்றாலும்
வாழ்வு தரும் வள்ளல் நீ சண்முகா!
மரமாகி நின்றவனை மயிலாக்கி வென்றவனே
மலைவாசம் செய்பவனே சண்முகா!
கரத்தினிலே வேல் தாங்கி கண்கண்ட தெய்வமென
காட்சிதர வேண்டும் நீ சண்முகா!
சிரம்தாழ்த்தி உன்னிரண்டு திருவடிகள் வணங்குகிறேன்
சீக்கிரமே குறைதீர்ப்பாய் சண்முகா!
நாழிகையும் ஊழியென துன்பத்தால் நீள்வதினால்
நாடுகிறேன் உன்னருளை சண்முகா!
கோழியினைக் கொடியாக்கிக் குறைதீர்த்த குமராவுன்
கருணையினால் நான்வாழ்வேன் சண்முகா!
ஆழியினை அளந்தார்கள் என்பக்தி அதைவிடவும்
ஆழம்தான் அறியாயோ சண்முகா!
வாழியவே முருகாநீ வாழ்கவெனத் துதித்தேன்நான்
வாழவொரு வழிசொல்வாய் சண்முகா!
அப்பனையே சீடனென ஏற்றவனே உனையன்றி
அகிலத்தில் குருவுண்டோ சண்முகா!
உப்பின்றி உணவுன்னும் மாக்கள்தான் சத்குருவாய்
ஊதாரி தனையேற்பார் சண்முகா!
தப்பில்லா உனையன்றி சத்குருதான் வேறேது?
தீந்தமிழின் நாயகனே சண்முகா!
எப்போதும் பக்தர்கள் குறைதீர்க்கும் கடவுள் நீ
என்குறையைத் தீர்ப்பாயா சண்முகா!