செந்தூர்‌ முருகன் துதி‌ (Version 2)

எந்ததிசை பார்த்தாலும் உன்முகமே தெரியுதடா
எந்தன்வடி வேலவனே சண்முகா!
கந்தனது நாமங்கள் கண்களிலே நிறையுதடா
கார்த்திகையர் புகழ்மைந்தா சண்முகா!
சிந்தனையில் உன்வேலே அறிவாக விளங்குதடா
சக்திவுமை பாலகனே சண்முகா!
சுந்தரனே உன்தமிழ்தான் கவியாக மாறுதடா
சொன்னதெலாம் சரிதானா சண்முகா!


வினையெல்லாம் தீர்த்துவிடும் உன்னபய முத்திரைதான்
வெற்றிவடி வேலவனே சண்முகா!
தினையோடு தேனாக என்நாவில் இனிக்கின்றாய்
தமிழ்போலத் தித்தித்தாய் சண்முகா!
எனைவாட்டும் துயரேல்லாம் வேலாலே அழிக்கின்ற
எதிர்வேலா என்னருமை சண்முகா!
மனைதோறும் குடிகொண்டு மானிடரை கரை சேர்க்கும்
மணிகண்ட சோதரனே சண்முகா!


கண்களிலே ஒளியானாய் உடம்பினிலே உயிரானாய்
கண்டதெலாம் நீயானாய் சண்முகா!
எண்களிலே முதலாகி எழுத்தினிலே அகரமென
எனையாளும் ஆண்டவனே சண்முகா!
பண்களிலே சொல்லானாய் பாட்டினிலே சுரமானாய்
பச்சைமயில் வாகனனே சண்முகா!
உண்ணுகையில் உணவானாய் அருந்துகையில் நீரானாய்
உள்ளிருந்து மூச்சானாய் சண்முகா!


குறையென்ன என்றாலும் உனைக்கண்டு முறையிட்டால்
குளிர்ந்துதவி செய்பவனே சண்முகா!
சிறைவாசி போலிங்கு நான்வாழ்தல் அறியாயோ!
சொல்பதிலை சுந்தரனே சண்முகா!
மறைநான்கின் பொருளாகி புத்தியிலே விளங்குகின்ற
மயிலோனே மால்மருகா சண்முகா!
பிறைசூடும் பசுபதியின் புத்திரனே‌ என்துன்பம்
போவதற்கு கதிநீயே சண்முகா!


ஆறுபடை வீடுகளை ஆள்கின்ற மன்னவனே
ஆறுதலாய் வந்தவனே சண்முகா!
கூறுமடி யார்கள்வினை தீர்க்கின்ற தென்னவனே
குன்றெல்லாம் நிறைந்தவனே சண்முகா!
நீறுதனைப் பூசியுனைப் பெயர்சொல்லித் தொழுவோரை
நித்தியமாய்க் காக்கின்ற சண்முகா!
மாறுகின்ற இவ்வுலகில் மாறாத தத்துவமே
மனக்கவலை நீதீர்ப்பாய் சண்முகா!


வள்ளியினை மணம்செய்ய விளையாடல் புரிந்தவனே
வேல்கொண்டு பகைநீக்கும் சண்முகா!
வெள்ளிமலை எனும்ஊரில் மலைமேலே நின்றருளை
வெள்ளமெனப் பாய்ச்சுகின்ற சண்முகா!
உள்ளதெலாம் நீயாகத் தெரிகின்ற  மாயத்தை
உளமாரத் தந்தவனே சண்முகா!
அள்ளியுனைக் கைகளிலே எத்தனைபேர் எடுத்தாலும்
அணுவளவும் குறையாத சண்முகா!


திருச்செந்தூர் கடல்காற்று சாமரமாய் வீசிடவே
திருக்கோவில் கொண்டதிரு சண்முகா!
அருட்கடலே உன்னாழம் பூமியிலே யாரறிவார்
அணையாத உயிர்விளக்கே சண்முகா!
முருகென்ற வார்த்தைக்குன் அழகென்று பொருள்தந்த
முத்தமிழின் காவலனே சண்முகா!
இருள்சூழ்ந்த என் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறேன்
இக்கணமே குறைதீர்ப்பாய் சண்முகா!


வரம் வேண்டி யார்வந்துன் வாசலிலே நின்றாலும்
வாழ்வு தரும் வள்ளல் நீ சண்முகா!
மரமாகி நின்றவனை மயிலாக்கி வென்றவனே
மலைவாசம் செய்பவனே சண்முகா!
கரத்தினிலே வேல் தாங்கி கண்கண்ட தெய்வமென
காட்சிதர வேண்டும் நீ சண்முகா!
சிரம்தாழ்த்தி உன்னிரண்டு திருவடிகள் வணங்குகிறேன்
சீக்கிரமே குறைதீர்ப்பாய் சண்முகா!


நாழிகையும் ஊழியென துன்பத்தால் நீள்வதினால்
நாடுகிறேன் உன்னருளை சண்முகா!
கோழியினைக் கொடியாக்கிக் குறைதீர்த்த குமராவுன்
கருணையினால் நான்வாழ்வேன் சண்முகா!
ஆழியினை அளந்தார்கள் என்பக்தி அதைவிடவும்
ஆழம்தான் அறியாயோ சண்முகா!
வாழியவே முருகாநீ வாழ்கவெனத் துதித்தேன்நான்
வாழவொரு வழிசொல்வாய் சண்முகா!


அப்பனையே சீடனென ஏற்றவனே உனையன்றி
அகிலத்தில் குருவுண்டோ சண்முகா!
உப்பின்றி உணவுன்னும் மாக்கள்தான் சத்குருவாய்
ஊதாரி தனையேற்பார் சண்முகா!
தப்பில்லா உனையன்றி சத்குருதான் வேறேது?
தீந்தமிழின் நாயகனே சண்முகா!
எப்போதும் பக்தர்கள் குறைதீர்க்கும் கடவுள் நீ
என்குறையைத் தீர்ப்பாயா சண்முகா!

ஆலமரம் – தமிழ்க்கவிதை

ஆற்றங்கரைக் காட்டுப்புல்
ஆறேழு நாட்களில் வளர்ந்து விடலாம்;
ஆனால்,
அருகில் இருக்கும் ஆலமரம் வளர
ஆண்டுகள் பல ஆகும்;

வளர்ந்து விட்ட காட்டுப்புல்
வளர்ந்து கொண்டிருக்கும் ஆலமரத்தைக் கேலி செய்வது
வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்
வேடிக்கைதான்.

ஆற்றங்கரைப் புல்லை
அரை நொடியில் பிடிங்கி எறிந்து  விடலாம்.
ஆனால் ஆலமரமோ
ஆண்டுகள் பல ஆனாலும்
அசராமல் நிற்கும்;
ஆயிரம் பேருக்கு நிழல் கொடுக்கும்;
அக்கினி வெயிலில் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல்
அளிக்கும்;
அருகில் வருபவர்களையெல்லாம்
அமர வைத்து சாமரம் வீசும்.
ஆகாயத்தில் மேகங்களைக் கூட்டி
அடைமழையைப் பொழிய வைக்கும்.
அதனால் விளையும்
அரிசியையும் பருப்பையும்‌ உண்டு
அகிலமே பசியாறும்…

காட்டுப்புல் என்று என்னை‌‌‌ எண்ணிக்
களையெடுக்க வேண்டாம்!
கொஞ்சம் காத்திருங்கள்…

விழுவது போல் கொஞ்சம் நான் விழுவேன்..
வேலவன் துணையால் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவேன்..

விழுகிறேனே என‌ என்னை
வெறுக்காமல்
வாழ விட்டால் போதும்..
விழுதுகள் தாங்கிய ஆலமரமாய்
விரைவில் நான் உயர்ந்து நிற்பேன்…
விருதுகள் பல வாங்கி
வீட்டையும் நாட்டையும்
வியக்க வைப்பேன்..

என் பேச்சு சில சமயங்களில்
கோபக்கனலால் சுட்ட பழமாக இருந்திருக்கலாம்…
என் எழுத்தோ
கவிதை மழையால் குளிர்ந்து போன
சுடாத பழம்…
உங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?

எந்தை முருகன் எனக்குத் துணையிருப்பதால்,
என் எழுத்து வேலாகப் பாயும்;
என்‌‌ எண்ணம் மயிலாகப் பறக்கும்;
சற்று இதை சிந்தித்துப் பார்த்தால்
சேவல் கூவும் சத்தம் கூட உங்கள்
செவிகளிலே கேட்கும்..

காதல் வேதாந்தம் – தமிழ்க் கவிதை

உன் கண்ணின் ஒளியினிலே நெருப்பைப் பார்த்தேன்;
உன்‌ இசையின் வெள்ளத்தில் நீரைப் பார்த்தேன்;
உன் நடையில் இளந்தென்றல் காற்றைப் பார்த்தேன்;
நீ பார்த்தாய், நாணத்தில் மண்ணைப் பார்த்தேன்.

முகத்தினிலே வெண்ணிலவை முழுதாய்ப் பார்த்தேன்;
முத்தானப் பற்களிலே விண்மீன் பார்த்தேன்;
முடியழகில் கார்மேக வண்ணம் பார்த்தேன்;
மொத்தத்தில் ஐம்பூதம் உன்னில் பார்த்தேன்.

நீர் காற்று தீ பூமி ஆகாயம் நீ!
சுவை ஓசை ஒளி ஊறு மலர் வாசம் நீ!
அறிவுக்கும் செயலுக்கும் உதவும் பத்தும்
அவைபோக இருக்கின்ற நான்கும் நீயே!

இதுவன்று இதுவன்று நான் ‌என்கின்ற
வேதாந்த சாதனையால் உண்மை கண்டேன்;
இருபத்து நான்கிலுமே நானே இல்லை.
இருப்பதெலாம் நீயென்ற ஞானம் பெற்றேன்.

பிரளயம் – தமிழ்க்கவிதை

தேளும் பாம்பும் மனிதர் உருவில்
திரியும் பூமி இது;
மாளும் ஒருநாள் இவ்வுடல் என்பதை
மறந்த உலகம் இது;
ஆளுமை கடந்தவன் இறைவன் என்பதை
அறியாக் கூட்டம் இது;
நாளும் இதைநான் சொன்னால் கூட
நம்பாக் கும்பல் இது.

சுயநலம் ஒன்றே குறிக்கோள் ஆனால்
சாகும் மனித இனம்;
தயவே இன்றி மக்கள் வாழ்ந்தால்
தீயில் நிலம் எரியும்;
அயலான் ஒருவன் பசித்திருந் தாலும்
அடைமழை நின்றுவிடும்;
புயலைப் போலொரு பிரளயம் வந்து
பூமியை அழித்துவிடும்.

நாமிருக் கின்ற உலகம் வாழ்வது
நீதியின் விதிப்படிதான்;
சாமியும் கூட எங்கும் இருப்பது
சத்திய வடிவில்தான்;
பூமியும் கூட நம்மைப் பார்த்துப்
பொறுமை இழந்துவிடும்;
தாமிரபரணி ஆற்றில் கூடத்
தண்ணீர் வற்றிவிடும்.

மறைகள் சொன்ன உண்மை மறந்தோம்
முன்னோர் உரை மறந்தோம்;
சிறையில் சிக்கிய கைதியைப் போல
சிறுமை நிலையடைந்தோம்;
குறைகள் நீக்கி அன்பை வளர்த்தால்
கடவுள் அருள்தருவான்;
இறைவா எனநீ அழைத்தால் மட்டும்
எப்படி அவன்வருவான்?

காதல் புஜை – தமிழ்க் கவிதை

மழைத்துளி மண்ணில் சிந்திடுமோர்
மாலைப் பொழுதில் அவள்வந்தாள்;
குழைகள் சூடிய கலைமகளாய்க்
கண்ணுக் குள்ளே அவள்விழுந்தாள்;
அழையா விருந்தெனக் காதலினை
அகத்திற் குள்ளே அவள்நுழைத்தாள்;
பிழையோ சரியோ என்னுமொரு
பெருங்குழப் பத்தை அவள்கொடுத்தாள்.

தாணிக் குடமெனும் சிற்றூரில்
தூரல் வீச நடந்துவந்தாள்;
வாணியின் உருவாய் வந்ததினால்
விழிகளில் கண்ணீர் பெருகவைத்தாள்;
தூணிலும் துரும்பிலும் இருப்பவனைத்
தூயமெல் லிசையால் வெளிக்கொணர்ந்தாள்;
ஏணியைப் போலே இசைசாத்தி
எங்களை வானில் ஏற்றிவிட்டாள்!

புரமேரி எனும் சிற்றூரில்
பிறந்தவள் அவளெனத் தெரிந்துகொண்டேன்;
மரத்தோட் டத்தில் அவள்வாழும்
மாளிகை  இருப்பதை
அறிந்துகோண்டேன்;
சிரமம் தானெனத் தெரிந்தாலும்
சீக்கிர மேயொரு முடிவெடுத்தேன்;
வரமாய் வந்தாள் என்பதனால்
வாழ்க்கைக் கொடுக்கத் துணிந்துவிட்டேன்;

காயத் திரியில் விளக்கேற்றிக்
காதல் ஒளியைப் பரப்பி விட்டேன்;
சாயங் காலச் சூரியன்போல்
சிவந்த மலரால் பூசையிட்டேன்;
தாயும் தந்தையும் என்குருவும்
தெய்வமும் அவளெனத்  தெளிந்து விட்டேன்;
மாயம் செய்த மணிக்குயிலை
மணப்பெண் ணாக ஏற்றுவிட்டேன்.





செந்தூர் சண்முகர் துதி

எந்ததிசை பார்த்தாலும் உன்முகமே தெரியுதடா

எந்தன்வடி வேலவனே சண்முகா!

கந்தனது நாமங்கள் கண்களிலே நிறையுதடா

கார்த்திகையர் புகழ்மைந்தா சண்முகா!

சிந்தனையில் உன்வேலே அறிவாக விளங்குதடா

சக்திவுமை பாலகனே சண்முகா!

சுந்தரனே உன்தமிழ்தான் கவியாக மாறுதடா

சொன்னதெலாம் சரிதானா சண்முகா!

வினையெல்லாம் தீர்த்துவிடும் உன்னபய முத்திரைதான்

வெற்றிவடி வேலவனே சண்முகா!

தினையோடு தேனாக என்நாவில் இனிக்கின்றாய்

தமிழ்போலத் தித்தித்தாய் சண்முகா!

எனைவாட்டும் துயரேல்லாம் வேலாலே அழிக்கின்ற 

எதிர்வேலா என்னருமை சண்முகா!

மனையாளாய் நான்விரும்பும் காதலியே வரவேண்டும்

மணிகண்ட சோதரனே சண்முகா!

கண்களிலே ஒளியானாய் உடம்பினிலே உயிரானாய்

கண்டதெலாம் நீயானாய் சண்முகா!

எண்களிலே முதலாகி எழுத்தினிலே அகரமென

எனையாளும் ஆண்டவனே சண்முகா!

பண்களிலே சொல்லானாய் பாட்டினிலே சுரமானாய் 

பச்சைமயில் வாகனனே சண்முகா!

உண்ணுகையில் உணவானாய் அருந்துகையில் நீரானாய்

உள்ளிருந்து மூச்சானாய் சண்முகா!

குறையென்ன என்றாலும் உனைக்கண்டு முறையிட்டால்

குளிர்ந்துதவி செய்பவனே சண்முகா!

சிறைவாசி போலிங்கு நான்வாழ்தல் அறியாயோ!

சொல்பதிலை சுந்தரனே சண்முகா!

மறைநான்கின் பொருளாகி புத்தியிலே விளங்குகின்ற

மயிலோனே மால்மருகா சண்முகா!

பிறைசூடும் பசுபதியின் புத்திரனே‌ என்துன்பம்

போவதற்கு கதிநீயே சண்முகா!

ஆறுபடை வீடுகளை ஆள்கின்ற மன்னவனே

ஆறுதலாய் வந்தவனே சண்முகா!

கூறுமடி யார்கள்வினை தீர்க்கின்ற தென்னவனே

குன்றெல்லாம் நிறைந்தவனே சண்முகா!

நீறுதனைப் பூசியுனைப் பெயர்சொல்லித் தொழுவோரை

நித்தியமாய்க் காக்கின்ற சண்முகா!

மாறுகின்ற இவ்வுலகில் மாறாத தத்துவமே

மனக்கவலை நீதீர்ப்பாய் சண்முகா!

வள்ளியினை மணம்செய்ய விளையாடல் புரிந்தவனே

வேல்கொண்டு பகைநீக்கும் சண்முகா!

வெள்ளிமலை எனும்ஊரில் மலைமேலே நின்றருளை

வெள்ளமெனப் பாய்ச்சுகின்ற சண்முகா!

உள்ளதெலாம் நீயாகத் தெரிகின்ற  மாயத்தை

உளமாரத் தந்தவனே சண்முகா!

அள்ளியுனைக் கைகளிலே எத்தனைபேர் எடுத்தாலும்

அணுவளவும் குறையாத சண்முகா!

திருச்செந்தூர் கடல்காற்று சாமரமாய் வீசிடவே

திருக்கோவில் கொண்டதிரு சண்முகா!

அருட்கடலே உன்னாழம் பூமியிலே யாரறிவார்

அணையாத உயிர்விளக்கே சண்முகா!

முருகென்ற வார்த்தைக்குன் அழகென்று பொருள்தந்த

முத்தமிழின் காவலனே சண்முகா!

அருகிலவள் இல்லாமல் அணுவணுவாய்த் துடிக்கின்றேன்

அன்புருவே குறைதீர்ப்பாய் சண்முகா!

புரமேரி என்றவொரு சிற்றூரில் பூத்தவொரு

பூவைநான் நேசித்தேன் சண்முகா!

மரவள்ளிக் கிழங்கைப்போல் மனத்தினிலே ஆழத்தில்

மங்கையவள் விளைந்தாளே சண்முகா!

மரமாகி நின்றவனை மயிலாக்கி வென்றவனே

மலைவாசம் செய்பவனே சண்முகா!

சிரம்தாழ்த்தி உன்னிரண்டு திருவடிகள் வணங்குகிறேன்

சீக்கிரமே குறைதீர்ப்பாய் சண்முகா!

கோழிக்கோ டெனுமூரின்‌‌ அருகினிலே வாழ்கின்றாள்

காதல்நோய் அவள்தந்தாள் சண்முகா!

கோழியினைக் கொடியாக்கிக் குறைதீர்த்த குமராவுன்

கருணையினால் நான்வாழ்வேன் சண்முகா!

ஆழியினை அளந்தார்கள் என்காதல் அவைவிடவும்

ஆழம்தான் அறியாயோ சண்முகா!

வாழியவே முருகாநீ வாழ்கவெனத் துதித்தேன்நான்

வாழவொரு வழிசொல்வாய் சண்முகா!

அப்பனையே சீடனென ஏற்றவனே உனையன்றி

அகிலத்தில் குருவுண்டோ சண்முகா!

உப்பின்றி உணவுன்னும் மாக்கள்தான் சத்குருவாய் 

ஊதாரி தனையேற்பார் சண்முகா!

தப்பில்லா உனையன்றி சத்குருதான் வேறேது?

தீந்தமிழின் நாயகனே சண்முகா!

எப்போதும் பக்தர்கள் குறைதீர்க்கும் கடவுள் நீ

என்குறையைத் தீர்ப்பாயா சண்முகா!

செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம் (தமிழ்க்கவிதை)

சஷ்டியினை நோக்கியவுன் சிஷ்டர் காக்கும்

  சண்முகனே உந்தனிரு மலர்தாள் போற்றி!

அஷ்டதிக்கில் உள்ளோர்கள் வணங்கும் எந்தன்

  அம்பிகையின் திருமைந்தா போற்றி போற்றி!

கஷ்டங்கள் எத்தனையோ வந்தா லும்முன்

  கடைக்கண்ணால் காக்கின்ற கந்தா போற்றி!

இஷ்டம்தான் வந்ததொரு மங்கை மேலே!

 இனியவளை நீகூட்டி வருவாய் போற்றி!

திருச்செந்தூர் கடற்கரையில் கோவில் கொண்ட

  தமிழ்மொழியின்‌ ஆண்டவனின் திருவேல் போற்றி!

பொருளின்பம் அறம்வீடு நான்கும் நல்கும்

  படையாறு கொண்டயிளம் பதியே போற்றி!

அருள்கடலே செந்தூரின் கடலோ என்னும்

  ஐயத்தை உண்டாக்கும் அழகே போற்றி!

பெருகிடுமென் மனக்காதல் தன்னைக் காக்கும்

  பேரருளே! உன்பாதம் போற்றி போற்றி!  

பழத்திற்கு கோபித்தோர் ஆண்டி ஆகிப்

  பழம்நீயாய் ஆகியயென் அப்பா போற்றி!

தழல்பொறிகள் ஆறுமொன்று சேர்ந்தே செந்தாள்

  தாமரையில் விழுந்ததனால் பிறந்தாய் போற்றி!

உழன்றுபல துன்பங்கள் வாட்டும் போதும் 

  உய்விக்கும் குமராவுன் பாதம் போற்றி!

அழவைத்துப் பார்த்ததெலாம் போதும் கந்தா!

 ஆட்கொண்டு வரமின்றே அருள்வாய் போற்றி!

கடலன்னை‌ தொடும்கரையில் கோவில் கொண்டு

  காதலரைச் சேர்க்கின்ற கந்தா போற்றி!

உடம்புக்குள் உயிராகி என்றும் நிற்கும்

  உமைமைந்தன் திருப்பாதம் போற்றி போற்றி!

விடம்போல பலதுன்பம் வந்தால் கூட

விரைந்தென்னைக் காக்கின்ற வள்ளல் போற்றி!

இடம்காலம் அத்தனையும் கடந்து நிற்கும்

 இனியதிரு மால்மருகா போற்றி போற்றி!

மண்ணுலகில் கொடுமைபல செய்த சூரன்

 மடிந்துவிடச் செய்ததமிழ் வேலே போற்றி!

பண்ணாலே துதிசெய்தால் பாவம் போக்கும்

பழனிமலை வாழ்முருகா போற்றி போற்றி!

எண்ணிற்கும் எழுத்திற்கும் தலைமை தாங்கும்

  என்கடவுள் வேலவனின் திருவேல் போற்றி!

கண்ணுக்குள் மணியாகிக் கலந்தாய் போற்றி!

  காதல்வரம் தருபவனே போற்றி போற்றி!

அப்பனுக்கு பாடம்தான் சொன்ன எந்தன்

 அன்பனது காலடிகள் இரண்டும் போற்றி!

தப்பின்றி ஒமென்னும் சொல்லின் உண்மை

  தகப்பனுக்கே உரைத்திட்ட திருவாய் போற்றி!

செப்புகின்ற தமிழ்மொழியை ஆளும் எந்தன்

  செந்தில்வடி வேலவனின் செவ்வேல் போற்றி!

எப்போழுதும் எனைக்காக்கும் இறைவா போற்றி!

  எனதுமனம் அறிந்துவரம் தருவாய் போற்றி!

வள்ளியினை மணம்செய்த வேலா போற்றி!

 வினையெல்லாம் நொடிப்பொழுதில் களைவாய் போற்றி!

வெள்ளிமலை வாழ்கின்ற குகனே போற்றி!

 விதியாலே வந்தபிணி எரிப்பாய் போற்றி!

உள்ளமெலாம் உருகிடவே செய்தாய் போற்றி!

  உன்னருளால் என்நெஞ்சை நனைத்தாய் போற்றி!

எள்போல உன்னருளைப் பெற்றால் கூட

 எண்ணமெலாம் நிறைவேற்றும் முருகா போற்றி!

மலையெல்லாம் குடியேறும் அரசே போற்றி!

  மறையோதும் ஞானிகளின் அறிவே போற்றி!

கலையெல்லாம் வாழ்விக்கும் கந்தா போற்றி!

 கந்தகிரி மலைவாழும் குருவே போற்றி!

சிலைக்குள்ளே உயிரான சித்தா போற்றி

 சரவணணே உன்பாதம் போற்றி போற்றி!

நிலைமாறும் இவ்வுலகில் நிலையாய் நின்ற

 நித்திலனே! உன்தாள்கள் போற்றி போற்றி!.

இந்திரனின் மகளைத்தன் இணையாய்‌ ஏற்ற

 இனியதமிழ் ஆண்டவனே! இறைவா போற்றி!

சுந்தரமும் யௌவனமும் குணமாய்க் கொண்ட

 சிங்கார வேலவனின் பாதம் போற்றி!

கந்தனெனும் நாமத்தை யார்சொன் னாலும்

 கருணைமழைப் பொழிகின்ற வானே போற்றி!

வந்ததடை அத்தனையும் வேலால் மாய்க்கும்

 வெற்றிவடி வேலவனே! போற்றி போற்றி!

நான்முகனைச் சிறையிட்ட நாதா போற்றி!

  நல்லோரை என்றென்றும் காப்பாய் போற்றி!

வானுரையும் தேவர்கள் துயரைத் தீர்த்த

 வள்ளிமண வாளாவுன் மலர்த்தாள் போற்றி!

தானென்ற அகந்தையினை நீக்கும் எந்தன்

 தணிகைவாழ் தெய்வானைப் பதியே போற்றி!

தேன்போலத் தித்திக்கும் உந்தன் நாமம்

 தினம்சொல்வோர் தமைக்காக்கும் குமரா போற்றி!

திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா – தமிழ்க்கவிதை

சிவக்கொழுந் தீஸ்வரா! சற்றுன் கடைக்கண்

அவதியுறும் என்மேல் விழட்டும் – தவப்பயனாய்

நான்விரும்பும் காதலியே வாழ்க்கைத் துணையாக

வான்மழைபோல் தாநீ அருள்.

ஆனந்த வல்லியுடன் அன்புருவாய் வீற்றிருக்கும் வானளந்த அண்ணா மலைச்சுடரே! – தேனலறும்

பூவணிந்த கேரளப் பெண்குயிலை நானிழந்தால்

சாவதன்றி இல்லை வழி.

திரிபுரம் தன்னை எரித்தழித்த வேந்தே!

பெரிய புராணப் பொருளே! – அரியயன்

தேடிய தென்னவனே! காதல்நோய் வந்ததினால்

வாடினேன் நின்னருளே காப்பு.

எங்கும் நிறைந்தவனே எண்குணம் கொண்டவனே!

வெங்கனல் ஏந்தியப் பேரொளியே! – எங்கெங்கோ

சுற்றி அலைந்தென் ஆருயிரை நான்கண்டேன்

பற்றினேன் நின்பதமே காப்பு.

கங்கையைச் சூடினாய் காமாட்சி கைபிடித்தாய்

இங்கெனக்கு ஒன்றுக்கே போராட்டம் – மங்கிய

என்வாழ்வில் சூரியனாய்த் தோன்றியயென் காதலியே

நின்றழுது கேட்கும் வரம்.

அப்பரும் சுந்தரரும் மாணிக்க வாசகரும்

ஒப்பிலா ஞானசம் பந்தரும் – செப்பிய

அத்தனையும் நான்துதியாய் அர்ப்பணம் செய்கிறேன்

பித்தனே பார்த்திடுவாய் கண்.

காமனை நெற்றி விழியால் எரித்தவனே!

நாமம் உருவம் கடந்தவனே! – தாமரைக்

கண்ணால் எனைவீழ்த்திக் கொன்றவளின் கைபிடிக்க

அண்ணலே! நீயே துணை.

மறைகள் வகுத்திட்ட மாமலை வேந்தே!

பிறைசூடி நின்ற சிவமே! –  சிறைசெய்த

காதல் எனும்நோயால் தூக்கம் பசியில்லை

ஆதலினால் தாநீ மருந்து.

உளுந்து வணிகரின் மூட்டையில் தங்கம்

அளந்தளித்த அன்புருவே! என்னில் – வளர்ந்தவுயிர்க்

காதலினைத் தந்தயென் கண்மணியை வேண்டிமன

வேதனையில் கூப்பினேன் கை.

செந்தூரில் ஆலயம் கொண்ட சிவக்கொழுந்தே!

கந்தனின் சீடனுமாய் ஆனவனே! – சிந்திய

கண்ணீர் துளியாலே பூசித்தேன் வந்தெந்தன்

எண்ணத்தை மெய்யாக்கு நீ.

காதல் வரம் – தமிழ்க் கவிதை

கருமேகம் பொழிகின்ற மழையைப் போலே

கானங்கள் பொழிகின்ற குயிலே கேளாய்!

உருவாகும் கவிதைகள் எல்லாம் உந்தன்

உயிர்காதல் தருகின்ற பரிசே அன்றோ?

வருவாயா வாழ்க்கைக்குத் துணையாய் என்று

வேலவனைத் தூதனுப்பிக் கேட்கச் சொன்னேன்.

குருவாயூ ரப்பனிடம்‌ குறைகள்‌ சொல்லிக்

காதலியே‌‌ உனதன்பை வரமாய்க் கேட்டேன்.

திங்களையும் ஞாயிறையும் ஒன்றாய்க்‌ காண

திருமகளே உன்முகத்தைப் பார்க்க வேண்டும்.

மங்கலமே! முன்செய்த பாவம் தீர்க்க

மெல்லிசையை நீபாடக் கேட்க வேண்டும்.

எங்கெங்கோ அலைந்துன்னைத் தேடிக் கண்டேன்;

ஏழ்பிறப்பும் உன்னோடே வாழ வேண்டும்.

தங்கயிடம் இல்லாமல் அலைகின் றேன்நான்.

திருச்செந்தூர் முருகன்தான் உதவ வேண்டும்.

நிலையில்லா இவ்வுலகில் உன்மேல் வந்த

நீங்காதக் காதலினை நிலையாய் வைத்த

மலைமகளாம் தேவியிடம் நான்மன்றாடி

மலையாளக்‌‌ குயிலுன்னை வரமாய்க் கேட்டேன்.

கலைமகளின்‌ பிறப்பாக மண்ணில் வந்த

கண்மணியே‌‌ உன்னோடு வாழும் வாழ்வை

அலைபாயும் குமரியிலே கோவில் கொண்ட

அன்னையிடம் கைகூப்பிப் பிச்சை கேட்டேன்.

வீதியிலே ஓரத்தில் கோவில் கொண்டு

வினைதீர்க்கும்‌ கணபதியின்‌ தாளைத் தொட்டு

மேதினியில் இசைத்தாய்க்கு மகளாய்ப் பூத்த

மெல்லினமே உன்னைத்தான் வரமாய்க் கேட்டேன்.

பாதியினை தேவிக்குக் கொடுத்த சம்பு

பதமலரைத் தொட்டெந்தென் சோகம் சொன்னேன்;

நீதியினை நிலைநாட்ட வந்த ராமன்

நின்றருளும் கோவிலிலே கண்ணீர் விட்டேன்.

சூரியனின்‌ குலத்தினிலே தோன்றி வந்த

செம்மலினை பக்தியுடன்‌ வணங்கி போற்றி 

நீர்பெருகும் ஆழியினை விரைவில் தாண்ட

நின்றுதவி செய்தவனை நினைத்துக் கொண்டு

ஏரியினை நிரப்பிவிடும் அளவில் கண்ணீர்

என்விழிகள் சிந்திடவே துதிகள் செய்தேன்.

வீரியமாய் வீசுகின்ற வாயு பெற்ற

வீரமகன் அனுமனிடம் உதவி கேட்டேன்.

சபரிமலை வாழ்கின்ற சாஸ்தா தன்னை

சரணமென நம்பிகரம் கூப்பி

நின்றேன்.

அபராதம் ஆயிரம்நான் செய்த போதும்

அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டேன்.

சுபவாழ்க்கை நாம்சேர்ந்து வாழ‌ வேண்டி

சிவனடியைத் தஞ்சமென ஏற்றுக் கொண்டேன்.

சபையெவ்லாம் கைதட்ட கீதம் பாடும்

உன்னைத்தான்‌‌ இறைவனிடம் உருகிக் கேட்டேன்.

தாண்டாத தடையில்லை உன்னைச் சேர;

தமிழ்மொழியில் சொல்லில்லை உன்னைப் பாட;

வேண்டாத தெய்வமென மீதி இல்லை;

வெண்மதியே நீயின்றி வாழ்க்கை இல்லை.

மூண்டெரியும் காதல்தரும் வெப்பம் தன்னில்

மூழ்கிதவம் பலசெய்தேன் உன்னை வேண்டி;

ஆண்டவனின் அருளிருக்க பயமொன்‌ றில்லை!

ஆரூயிரே! உனையன்றி யாரும் இல்லை

வெள்ளிமலை வெண்பா – தமிழ்க் கவிதை

வெள்ளி‌ மலைவாழும் வேலவா நீயுந்தன்

வள்ளிமேல் காதல் வளர்த்ததுபோல் – வெள்ளமாய்க்

கேரளப் பெண்மேலே காதல் பெருகியதே!

சேரவுன் வேலே துணை.

முருகா உனையன்றி வேறுதுணை இல்லை

பெருகியயென் காதலைக் காக்க – அருகில்

அவளிருந்தால் போதும் அகிலத்தை வெல்வேன்

தவமிருந்தேன் தாநீ வரம்.

சூரனைப் போரில் வதம்செய்த சுந்தரனே

பாரெனை உந்தன் கடைக்கண்ணால் – சேரனின்

நாட்டில் பிறந்தவோர் நங்கையை நான்சேர

காட்டுநீ கொஞ்சம் தயவு.

மயில்மேல் அமர்ந்திந்த மண்ணுலகைச் சுற்றும்

அயில்வேலா நின்னருள் வேண்டும் – குயில்போலப்

பாடி‌ மனம்கவர்ந்த பூங்கோதை சீக்கிரமே

தேடிவர வேண்டும் துணிந்து.

காது கொடுத்துநீ கேட்பாயா வேலவனே

ஏது கதியெனக்கு நீயின்றி – தூதுபோய்

என்னவளைக் கண்டெந்தென் செய்தி உரைப்பாயா

உன்னருளே தஞ்சம்‌ எனக்கு.

கோழிக்கோ டென்னும் நகரத்தின் பக்கத்தில்

ஆழிக்குச் சற்று தொலைவினிலே – தோழியுடன்

பொன்நேர் புரமேரி ஊரினைச் சுற்றிவரும்

என்னவளைக் கூட்டிவா நீ.

சூரிய காந்தம் எனும்பெயர் கொண்டவோர்

நேரிய வீட்டில் அவளிருப்பாள் – கூரிய

வெற்றிவேல் ஏந்தியவள் காதிலே என்செய்தி

சற்றுநீ சொல்லிவா இன்று.

அப்பனுக் கேபாடம் சொன்னவனே நீயெந்தன்

சொப்பன சுந்தரியின் ஊர்சென்று – தப்பின்றி

என்சேதி அத்தனையும் சொல்லிவா செய்கிறேன்

பொன்னாலே கோவில் உனக்கு.

மலையாளம் பேசும் மணிக்குயிலை எண்ணி

அலைபாயு தேயென் இதயம் – விலையென்ன

கேட்டாலும் நான்தருவேன் கந்தா அவள்வந்தால்

பாட்டாலே செய்வேன் துதி.

அரபிக் கடலோரக் காற்றிலவள் பாடும்

சுரமெல்லாம் ஆங்காங்கே கேட்கும் –  மரமெல்லாம்

சங்கீதம் கேட்டுத் தலையாட்டும் நீயவளை

இங்கே வரச்சொல் விரைந்து.

Design a site like this with WordPress.com
தொடங்கவும்